விவசாயத்திற்கு முக்கியத்துவம் தரும் வகையில் அத்துறைக்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என தேர்தலின்போது கூறிய திமுக பின்னர், கடந்த ஆண்டு ஆட்சியமைத்தவுடன் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் மாநிலத்தின் முதல் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தது. இந்நிலையில் 2022-23 நிதியாண்டுக்கான வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழக வேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் பட்ஜெட்டை சட்டசபையில் தாக்கல் செய்தார். இந்தியாவில் ஆந்திரா, கர்நாடகாவிற்கு பிறகு வேளாண்மைக்கு என தனி பட்ஜெட் தாக்கல் செய்யும் 3ஆவது மாநிலம் தமிழகம் என்பது குறிப்பிடத்தக்கது.
பட்ஜெட் தாக்கல் செய்த அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், கடந்த ஆண்டில் பட்ஜெட்டில் வெளியிடப்பட்ட 86 வகையான அறிவிப்புகளில் 80 அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிடப்பட்டு செயல்படுத்தப்படுகிறது என்று தெரிவித்தார்.

வேளாண் பட்ஜெட் 2022-23 : முக்கிய அம்சங்கள்
- சிறுதானிய உற்பத்தியை ஊக்குவிக்க திட்டங்களை அரசு செயல்படுத்தும்.பயிர்க் காப்பீடு திட்டத்திற்கு பட்ஜெட்டில் மாநில அரசின் பங்காக ரூ.2,339 கோடி ஒதுக்கீடு.
- 9.26 லட்சம் விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீடாக ரூ.2,055 கோடி வழங்கப்பட்டுள்ளது.
- 7,500 ஏக்கரில் இயற்கை வேளாண் சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கப்படும்.
- மாநில வேளாண் வளர்ச்சித் திட்டம் ரூ.71 கோடியில் புதிதாக செயல்படுத்தப்படும்.
- நெல் ஜெயராமன் பெயரில் 200 ஏக்கரில் பாரம்பரிய நெல் விதைகளை உற்பத்தி செய்து 20 ஆயிரம் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.
- வேளாண்மை பட்டப்படிப்பு முடித்த 200 இளைஞர்களுக்கு தொழில் தொடங்க தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும்.
- மரம் வளர்ப்புத் திட்டத்திற்காக வேளாண் பட்ஜெட்டில் ரூ.12 கோடி ஒதுக்கீடு.
- கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, தருமபுரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் துவரை உற்பத்தி மண்டலங்கள் அமைக்கப்படும்.
- மாவட்ட, மாநில அளவில் சிறுதானிய திருவிழா நடத்தப்படும்.
- இயற்கை விவசாய முறைகளை ஊக்குவிக்கும் திட்டத்திற்கு ரூ.400 கோடி ஒதுக்கீடு.
- சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் 2 மண்டலங்கள் உருவாக்கப்படும்.
- தஞ்சை, சேலம், திருவள்ளூர், நெல்லை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் சோயா பீன்ஸ் சாகுபடியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- மயிலாடுதுறையில் ரூ.75 லட்சத்தில் மண் பரிசோதனைக் கூடம் அமைக்கப்படும்.
- ஆதி திராவிட விவசாயிகளுக்கு கூடுதலாக 20% மானியம் வழங்கப்படும்.
- கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக டன்னுக்கு 195 ரூபாய் உயர்த்தி தரப்படும் என அறிவிப்பு.
- கரும்பு சாகுபடி ஊக்குவிப்புக்காக ரூ.10 கோடி ஒதுக்கீடு.
- தனியார் பங்களிப்புடன் தேனி, கோவை, கன்னியாகுமரியில் மொத்த காய்கறி விற்பனை வளாகங்கள் அமைக்கப்படும்.
- தக்காளி சாகுபடியை ஊக்குவிக்க ரூ. 4 கோடி ஒதுக்கீடு.
- விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க டேன்ஜெட்கோவிற்கு ரூ.5,157.56 கோடி ஒதுக்கீடு.
- ஊரக வளர்ச்சித் துறை மூலம் ரூ.1245.65 கோடியில் பண்ணைக்குட்டைகள், தடுப்பணைகள் மற்றும் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படும்.
- விவசாயிகள் இடுபொருட்களை எடுத்துச்செல்லவும், விளைபொருட்களை சந்தைக்கு எடுத்துச்செல்லவும் கிராம பஞ்சாயத்துகளில் ரூ.604.73 கோடி செலவில் 2,750 கிமீ நீளத்தில் சாலைகள் அமைக்கப்படும்.
- வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் உற்பத்தியாளர் குழுக்கள் மற்றும் சமுதாய பண்ணை பள்ளிகளை உருவாக்க ரூ.30.56 கோடி ஒதுக்கீடு.
- சிறு, குறு, நடுத்தர தொழில்கள் (MSME) மூலம் சிறிய விவசாயம் சார்ந்த தொழில்களை தொடங்க ரூ.1.5 கோடி வரை மூலதன மானியம்.
- வணிக வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் கிராம வங்கிகள் மூலம் தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு ரூ.1,83,425 கோடி வேளாண் கடன் வழங்கப்படுவதைக் கண்காணித்தல்.
- வேளாண்மை துறைக்கு மொத்தமாக ரூ.33,007.68 கோடி நிதி ஒதுக்கீடு.
நமது தளத்தில் வெளியாகும் செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ்அப்பில் தெரிந்துகொள்ள கீழுள்ள இணைப்பை கிளிக் செய்து இணைந்து கொள்ளுங்கள் https://chat.whatsapp.com/I1j7SMbuw4mBFoVacHuKkJ